articles

img

மனிதா  போற்றி ! நவகவி

மனிதா  போற்றி !  மனிதா...

உனை தோள்களில்  தூக்கிவைத்து

- அருள்  வந்துநான் ஆடுகிறேன்.  

மனிதா...

உன் காலடிச்     சுவடுகளை - தலை உச்சிமேல் சூடுகிறேன்.  

கடல்களே - உங்கள் - அலைகளை

கரங்களாய் - மாற்றி - மனிதனை

கட்டு வேன்கட்டு வேன்

- உயிரில் ஒட்டு வேன்ஒட்டு வேன்!

  (மனிதா)  

அவன்தீண்டும் போது  

நதி என்னும் மாது நடையில்

குடியேறும் நளினம்

சவத்தில் உருவாகும் சலனம்

 மதிமீது மனிதன் திருப்பாதம் பதிய  

நிகழும் பிரபஞ்ச நடனம்.

நெளியும் ஆகாய முதுகும்.  

 அவன் விழியில் ... நட்சத்திரத்

துகள்களைச் சேகரித்தேன்.

அவன் உடலில்... வெண்ணிலவை

பொடிசெய்து பூசிவைத்தேன்.  

 அவன் - முகவெளிச்சம்...

எனக்குள்ளே...  

கலங்கரை விளக்கினை ஏற்றியது. அவன்

- அகவெளிச்சம்... எனக்குள்ளே...

கதிரவ னைக்கரைத்து ஊற்றியது.  

(மனிதா)  

மனம்தேற்றிக் கொண்டேன்  

வன்தோற்றம் கண்ட

 புவிக்கு கடைத்தேற்றம் கிடைக்கும்.  

சருகும் தளிராகி துளிர்க்கும்.

 சவப்பெட்டி யாவும் சிசுத்தொட்டில் ஆகும்;

 மழலை கிறுக்கெழுத்தும் மணக்கும்.  

இறைவன் தலைஎழுத்தை ஜெயிக்கும்.  

இதய ஒலி... மத்தளமாய்  அவனுக்கு கவிஇசைத்தேன்.

 இமயத்தையே... நான்செதுக்கி அவனுக்கு

சிலைசமைத்தேன். என் - வீழ்ச்சிகளில்...

அவன்தானே... ஊன்று கோல்தந்து உயரவைத்தான். என் -

எழுச்சிகளில்... அவன்தானே..

நெம்பு கோல்தந்து நிமிரவைத்தான்.

  (மனிதா)